புத்தரும் அவர் தம்மமும் - பதிப்புரை


புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/butharum-avar-dhamma

 

பதிப்புரை

புத்தர் மானுடத்தின் ஒருமையை, சமத்துவத்தைப் பிரகடனப்படுத்தியவர்.

சாதி, இன ஏற்றத்தாழ்வைக் கடுமையாய் எதிர்த்தவர்.

அனைத்து மனிதர்களும் ஒரே உயிரியல் வகையைச் சார்ந்தவர்கள் என சுட்டிக்காட்டியவர்.

"கீழ்ச்சாதி எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ மேல்சாதி எனப்படும் ஒருவன் உண்டாக்கும் தீ போலவே ஒளிவிட்டு எரிந்திடும்"

"மேல்சாதி எனப்படும் ஒருவன் தாயிடமிருந்து பிறப்பது என்பது கீழ்ச்சாதி எனப்படும் ஒருவன் தாயிடமிருந்து பிறப்பதினின்று ஒரு துளி கூட வேறுபட்டதன்று”.

எந்த இனத்தைச் சார்ந்த மனிதராயினும் பிணி, மூப்பு, இறப்பு ஆகியவற்றுக்கு ஆட்படுவர்.

சாதி, இனம், பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பேதம் காண எந்தக் காரணமும் இல்லை.

பிறப்பால் எவரும் கீழ்சாதி இல்லை.

பிறப்பால் எவரும் மேல் சாதி இல்லை.

மனிதகுலத்தைப் பிரிப்பது அவர்தம் செயல்களே அன்றி பிறப்பல்ல.

- என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் துக்கமான சாதீய அடுக்குமுறையை உள்ளடக்கிய பார்ப்பனீய சதுர்வருணக் கோட்பாட்டையும் (நால்வருணக் கோட்பாடு), அவற்றை நியாயப்படுத்த உண்டாக்கப்பட்ட கடவுள், கர்மவிதி , ஆன்மா , மறுபிறப்பு, யாகம் - பலிகொடுத்தல் ஆகிய மூட நம்பிக்கைகளையும் முதன் முதலாக எதிர்த்து சாட்டையை சுழற்றிய மாபெரும் புரட்சியாளர் புத்தர் என்பதை ஆதார பூர்வமாக தர்க்கரீதியான விவாதங்களோடு ஆணித்தரமாக நிருவியுள்ளார் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தனது இறுதிப் படைப்பான Buddhaand His Dhamma என்ற நூலில்.

இந்நூல் பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களால் தமிழில் புத்தரும் அவர் தம்மமும்' என மொழிபெயர்க்கப்பட்டு 1994 - ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பவுத்தம் பற்றிய இவ்வழகான தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்திருப்பது அறிந்து தைவான் நாட்டிலுள்ள (The Corporate Body Of the Buddha Educational Foundation) என்ற அமைப்பு இந்நூலை மறுபதிப்பு செய்து 60000 பிரதிகள் வெளியிட்டு மக்களிடம் இலவசமாக சேர்ப்பித்தது.

தற்பொழுது இந்நூலின் பிரதிகள் இல்லை என்பதால் ஆய்வாளர்களும், இளைய தலைமுறையினர் பலரும் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு நூல் கிடைக்குமா?' என்று மிகுந்த ஆவலுடன் தொடர்ந்து விசாரித்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று புத்தரும் அவர் தம்மமும்' என்ற இந்நூல் மூன்றாம் பதிப்பாக வெளியிடப்படுகிறது.

இப்பணிக்கு எனக்கு வழிகாட்டி உதவிய புத்தரொளி பன்னாட்டு மையம்' நிறுவனரும், பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களின் நெருங்கிய நண்பருமான திரு. அன்பனார் அவர்களுக்கும், BSNL இளநிலை பொறியாளர் திரு. சுரண்டை ஆறுமுகம் அவர்களுக்கும், நூலைக் கணினி ஆக்கம் செய்து கொடுத்து உதவிய போதி டெக்னாலஜி உரிமையாளர் திரு. சசிதரன் அவர்களுக்கும், வடிவமைத்து அச்சிட்டுக்கொடுத்த எலிஜா அச்சகத்தாருக்கும், இந்நூலை மறுஆக்கம் செய்ய எனக்குப் பெரிதும் ஊக்கமளித்த இளைய தலைமுறை சகோதர, சகோதரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

தோழமையுடன்,

பேராசிரியர் வாசுகிபெரியார்தாசன், எம்.ஏ. எம்.ஃபில்., பி.எச்.டி., 

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog