பெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்) - எதற்காக இந்நூல் தொகுப்பு?

பெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்) - எதற்காக இந்நூல் தொகுப்பு?

தலைப்பு

பெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)

எழுத்தாளர் பெரியார்|அம்பேத்கர்
பதிப்பாளர்

தந்தை பெரியார் திராவிடர் கழகம்

பக்கங்கள் 1250
பதிப்பு முதற்பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை
விலை Rs.1,250/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/periyar-ambedkar-sooriyan.html

 

எதற்காக இந்நூல் தொகுப்பு?

தந்தை பெரியாரின் எழுத்தும் பேச்சும் டாக்டர் அம்பேத்கரின் எழுத்தும் பேச்சும் பல தொகுதிகளாக வெளிவந்திருக்கும் போது, தனியாக அவர்கள் இருவரின் கருத்துகள் அடங்கிய ஒரு தொகுப்பு தேவையா? என்ற கேள்வி பலருக்கு எழலாம்.

வெறுப்பு அரசியல் செய்தவர் என்று பெரியாரை ஒதுக்குவதும் தேசியவாதி என்று அம்பேத்கரை உள்ளிழுப்பதற்கும் பின்னால் சதியால் பின்னப்பட்ட சூழ்ச்சி வலை விரிகிறது. பெரியாரையும் அம்பேத்கரையும் தனிமைப்படுத்தும் தந்திரத்தை பார்ப்பனீயம் திறமையாகக் கையாண்டு வருகிறது.

அம்பேத்கரை இந்துத்துவ அம்பேத்கர் என்று இந்து தேசியவாதியாக அடையாளப்படுத்தும் போக்கு இந்த சதியால் விளைந்ததாகும்.

பார்ப்பன சனாதன இந்து மதத்தின் ஏற்றத் தாழ்வுச் சமூக ஏற்பாட்டை கடைசி வரை எதிர்த்து தீவிரமாகப் போராடியவர்கள் பெரியாரும் அம்பேத்கரும்.

பார்ப்பனீய சதித் திட்டத்தில் பார்ப்பனரல்லாத மக்களாகிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மூழ்கி விடாமல் தடுக்க, இந்து மதம், இந்து சமூகம், காந்தியம் பற்றி ஆய்ந்தறிந்து கூறியவைகளில் உள்ள ஒற்றுமைத் தன்மை குறித்தும், கொடிய இந்து சமூக வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற வேண்டிய தீர்வுகளைப் நோக்கி பெரியார், அம்பேத்கர் என்ற இரு ஆளுமைகளின் ஒத்த செயல்பாடுகள் குறித்தும் இந்நூல் பேசுகிறது.

வருணாசிரம மனுதர்ம சவக்குழிக்குள் நம்மைப் புதைக்க பார்ப்பன இந்துத்துவாவின் கொடுங்கரங்கள் விரிந்து பரவும் இச்சூழலில், அதை வெட்டியெறிந்து விடுதலை பெற இரு பெரும் ஆயுதங்களாக தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும் நமக்குக் கிடைத்திருக்கிறார்கள். எனவே, பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியாகி இப்பேராயுதங்களை நாம் இழந்து விடக்கூடாது.

பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் வேறு வேறு; அம்பேத்கரை பெரியாருடன் ஒப்பிட முடியாது என்று கொக்கரிக்கும் இந்துத்துவ கும்பலின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்து, இந்த சமூகத்தின் சகல கேட்டிற்கும் காரணம் இந்து மதமே! அதை ஒழிப்பதே தங்கள் வாழ்நாள் கடமை என்று பிரகடனப்படுத்தி ஒரே நேர்கோட்டில் பணியாற்றிய இணையற்ற இரு போராளிகள் இவர்கள் என்பதை அடையாளம் காட்டுகிறது இந்நூல்.

1936 ஆம் அண்டு லாகூரிலுள்ள ஜாத் - பட் தோடக் மண்டல் அமைப்பின் வருடாந்திர மாநாட்டிற்காக அம்பேத்கர் தயாரித்த சாதி ஒழிப்பு பற்றிய உரையை கருத்து மாறுபாட்டால் வெளியிட அந்த அமைப்பு உடன் படவில்லை. அதனால், அந்த உரையை அம்பேத்கர் ஆங்கிலத்தில் அச்சிட்டு வெளியிட்டார். அதுவரை அம்பேத்கரை நேரில் சந்தித்திராத பெரியார் அவ்வுரையை தமிழில் வெளியிட்டு கொள்கை உறவை வெளிப்படுத்தினார்.

1940 ஆண்டு வட இந்தியாவில் பயணம் செய்தபோது பெரியாரும் அம்பேத்கரும் சந்திக்கிறார்கள். இதுதான் இருவரும் முதன்முதலாக நேரில் சந்தித்த நிகழ்வு! 06.01.1940 அன்று பம்பாயை சென்றடைந்த பெரியாரை, அன்றிரவு 9 மணிக்கு தனது மாளிகைக்கு அழைத்து அம்பேத்கர் உபசரித்தார். மறுநாளான 07.01.1940 அன்று மாலை 4 மணிக்கு கோகலே கல்வி நிலையக் கழகத்தில் பெரியார் வருகையைக் கொண்டாட தேநீர் விருந்து நடத்தினார். அடுத்த நாளான 08.01.1940 மாலை 5.30 மணிக்கு பெரியாருடன் சென்று ஜின்னாவைக் கண்டு பேசினார். மறுதினமான 09.01.1940 இரவு 9 மணிக்கு பட் உயர்தரப் பள்ளி மண்டபத்தில் பெரியாருக்கு ஓர் அரிய விருந்தளித்தார் அம்பேத்கர்.

பெரியார் பம்பாயில் இருந்த நான்கு நாட்களும் உடனிருந்து அதில் மூன்று நாட்கள் விருந்தளித்து மகிழ்ந்து தனது கொள்கை உறவை உறுதிப் படுத்தினார் அம்பேத்கர்.

பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கையும் அதையொட்டிய அவர்கள் உறவும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்திருந்தது. வரலாற்றுக் காலம் தொட்டு அடிமைகளாய் அவதிப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்த அத்தலைவர்களின் சிந்தனைகளையும் செயல் களையும் உள்வாங்கி பார்ப்பனீய சூழ்ச்சிகளை வென்றெடுக்கவே இந்நூல்.

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog