Skip to content

இந்திய வரலாற்றில் பகவத் கீதை - பதிப்புரை - 2

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

 

 https://periyarbooks.com/products/india-varalaattril-bhagavad-githai

பதிப்புரை - 2

உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம், 'கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது, அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்தெழவிடாமல் அடக்கிவைப்பதற்கும் உயர் வர்க்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுவதே கீதையின் தத்துவம்.

பகவத் கீதை இயற்றப்பட்ட நாளிலிருந்தே, அது புரட்சி சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கான ஆயுதமாக பயன்பட்டு வருகிறது. சிதைந்து கொண்டிருந்த பௌத்தத்திற்கு மரண அடி கொடுப்பதற்காக ஒன்பதாம் நூற்றாண்டில் சங்கராச்சாரியார் பகவத் கீதையின் உதவியைத்தான் நாடினார். இருபதாம் நூற்றாண்டில் மதச்சார்பற்ற ஜனநாயக வளர்ச்சியை அழிப்பதற்காக மகாத்மா காந்தி கீதையின் போதனைகளைத்தான் பயன்படுத்தினார்.

பார்ப்பனிய நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு பொது மனித நோக்குடன், நமது கடந்தகாலம் பற்றிப் படிக்கும் வேளையில், இந்திய வரலாற்று நிகழ்வுகளும், அதன் வளர்ச்சியும், வரலாற்று நபர்களும் முற்றிலும் வேறுவிதமாகக் காட்சியளிக்கிறார்கள். சிந்தனையிலும் செயலிலும் நிகழும் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றித் தனது கருத்தை லியோ டால்ஸ்டாய் (1826-1910) இவ்வாறு விளக்கிக் கூறினார்: “முன்பெல்லாம் எனக்கு நல்லனவாகத் தோன்றியவை அனைத்தும் இப்பொழுது கேடானவையாகத் தோன்றுகின்றன. கேடானவையாகத் தோன்றியவை அனத்தும் நல்லனவாகத் தோன்றுகின்றன. ஒரு செயலை நிறைவேற்றுவதற்காக வெளியில் செல்லும் ஒரு மனிதன், பாதி வழியில் அச்செயலை நிறைவேற்றுவதற்கான தேவையில்லை என்று முடிவு செய்து வீடு திரும்பும் நிகழ்வு ஒரு மனிதனுக்கு நிகழ்வது போன்று எனக்கும் நிகழ்ந்தது. அவனுக்கு இடப்புறமாக இருந்தவையெல்லாம் அவனுக்கு வலப்புறமாகவும் வலப்புறமாக இருந்தவை இடப்புறமாகவும் இடம் பெயர்ந்தன.... எனது வாழ்க்கையின் போக்கும் திசை மாறியது. எனது விருப்பங்களும் மற்றம் பெற்றன. நன்மையும் தீமையும் இடம் மாறின.'' இந்தியாவின் கடந்தகாலம் பற்றிய எனது ஆய்வை நூலாக்கும் வேளையில் நானும் அந்த ரஷிய மாமனிதரின் அனுபவத்தைத் தான் உணர்ந்தேன்.

- பிரேம்நாத் பசாஸ்

Back to blog